23 September, 2023

இனவாதமும் மதவாதமும் பேசி தமிழ் எம்.பிக்களைச் சீண்டாதீர்.

இனவாதம், மதவாதம் பேசி வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சீண்டிப் பார்ப்பதை தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இன்று(29.08.2023)கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

13மைனஸ், 13பிளஸ் எனக் கூறுபவர்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டில் இனவெறியை, மதவெறியைத் தூண்டும் கருத்துக்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கின்றன.

இது முழு நாட்டுக்கும் பேரவமானத்தை ஏற்படுத்தும். வடக்கு, கிழக்கு மக்களோ அல்லது தெற்கில் உள்ள மக்களோ மீண்டுமொரு வன்முறையை, யுத்தத்தை விரும்பவில்லை.

அரசியல்வாதிகள் தான் தங்கள் சுயலாபத்துக்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் கக்கி வருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசு இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.