தெற்கு லண்டனில் தெருச்சண்டையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் இருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு, இரத்த காயங்களுடன் உதவி கேட்டு மதுபான விடுதிக்குள் நுழைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மதுபான விடுதிக்குள் சுருண்டு விழுந்த
சுமார் 20 வயது கடந்த அந்த இளைஞன், அந்த மதுபான விடுதிக்குள் சுருண்டு விழுந்த நிலையில், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோய்டன் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில், தொடர்புடைய அந்த இளைஞரை இருவர் ஆயுதங்களுடன் துரத்தியதாகவும், அந்த இளைஞரின் முதுகில் ஆழமான வெட்டுக்காயம் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி 7.45 மணியளவில் குரோய்டன் பாவ்சன்ஸ் சாலைக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது கொலை வழக்காக இந்த சம்பவத்தை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
பொலிசார் துரிதமாக செயல்பட்டு ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தாலும், காயங்கள் காரணமாக மரணமடைந்ததாகவே கூறப்படுகிறது.
இளைஞரின் உறவினர்களுக்கு தகவல்
சம்பவத்தின் போது பாவ்சன்ஸ் சாலையில் கடந்து சென்ற பொதுமக்களும், அந்த இளைஞர் உதவி கேட்டு நுழைந்த மதுபான விடுதியில் அப்போதிருந்த வாடிக்கையாளர்களும் பொலிசாருக்கு நடந்தவற்றை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய இளைஞரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் காணப்பட்ட பின்னர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.