வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் மனித வாழ்வில் சில விடயங்கள் தான் அவர்களை நின்று இரசிக்க வைக்கும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் மனநிலைகேற்ப சில பொழுதுபோக்கு காணப்படும். அவர்கள் தங்களை அமைதிப்படுத்திக்கொள்ள தமக்கு பிடித்த விடயத்தில் ஈடுபட்டுக்கொள்வார்கள்.
இந்த வரிசையில் விளையாட்டு என்பது ஒருவரின் மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்வதில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளளது.
மைதானத்தில் களமிறங்கி விளையாடும் வீரராக இருந்தாலும் சரி, அந்த விளையாட்டை பார்த்து இரசிக்கும் இரசிகனாக இருந்தாலும் சரி அவர்கள் விளையாட்டில் ஈடுபாடு செலுத்தும் போது மிகவும் மகிழ்ச்சியான, குதூகலமான உற்சாகம் நிறைந்த ஓர் உலகுக்கு சென்று விடுவார்கள்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பர் கிங் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி என்பவற்றுக்கு இடையிலான இறுதி சுற்று அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்றைய தினம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2023
2007ஆம் ஆண்டு, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால், இந்தியன் பிரீமியர் லீக் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இதனடிப்படையில் இந்தியன் பிரீமியர் லீக் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 16 ஆவது போட்டி தொடர் இவ்வாண்டு நடைபெறுகின்றது.
TATA IPL 2023 இல் மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்,குஜராத் டைட்டன்ஸ்,டெல்லி கெபிடல்ஸ்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,பஞ்சாப் கிங்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் என மொத்தம் 10 அணிகள் பங்குப்பற்றின.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ம் ஆரம்பமானது. இந்த தொடருக்கான லீக் போட்டிகள் மே 21ம் திகதி வரை நடைபெற்றன.
பத்து அணிகளுக்குள் இடம்பெற்ற லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி,ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி என்பன Playoff சுற்றுக்கு தெரிவாகின.