23 September, 2023

புனித நூல் எரிக்கப்பட்ட விவகாரம்: ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

அண்மையில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அழுத்தங்களுக்கு அடிபணிந்து இதைக் கருத்துச் சுதந்திரம் என மனித உரிமைகள் பேரவை அறிவித்தால், உலகளாவிய தெற்கு மற்றும் மேற்கத்திய மதிப்பு அமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மதத்தின் மீதான தாக்குதல்

எனவே இந்தச் சம்பவத்தைக் கருத்துச் சுதந்திரச் செயலாகக் கருத முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்கள் இதை மதத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகின்றனர், ஆனால் இந்தச் செயலை ஆதரித்த சில மேற்கத்திய நாடுகள், கருத்துச் சுதந்திரத்தின் துறைகளை விரிவுபடுத்த முயற்சிப்பதாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பும் பங்கு வகிக்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையில் நிறைவேற்றப்பட்ட கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தை பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் எழுப்புமாறு வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளை உறுதி செய்வதில் பொதுநலவாய அமைப்பும் பங்கு வகிக்க வேண்டுமெனவும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Share