tamil cinema : வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் நேற்று மதியம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) என தெரியவந்துள்ளது.
கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதே இவர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் கொத்மலை நீர்தேக்கத்தின் மின் உற்பத்திக்காக நீரை வழங்கும் நீர் தாங்கியிலிருந்தே மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சடலங்கள் மீதான மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.