கடல் நடுவே பிறந்த குழந்தை..!! யாழ்பாணத்தில் வியக்கவைக்கும் சம்பவம்..!!

கடல் நடுவே குழந்தை ஒன்று பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,கடந்த (17.04.2014) புதன் கிழமை அன்று நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் கூறியுள்ளனர்.அதனை அடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால் , பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.இந்நிலையில், பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததையடுத்து, ஆண்களை படகின் கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு அனுப்பியதையடுத்து, படகில் பயணம் செய்த பெண்கள் குறித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும் , அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.