யாழ்.போதனா வைத்தியசாலையில் குழப்பம்..!! இறுதிச் சடங்கில் ஏற்பட்ட பரபரப்பு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.71 வயதுடைய கருங்காலி, காரைநகர் பிரதேசத்தில் வசித்து வந்த சின்னையா என்பவரின் சடலமே இவ்வாறு மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் கடந்த 26.03.2024 அன்று குறித்த நபர் சங்கானைப் பகுதியில் வீதியை கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (2024.04.22) அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.விபத்து மரணம் குறித்து விசாரணை நடத்த மானிப்பாய் பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு சடலம் இல்லை.இந்நிலையில் மீண்டும் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்து வந்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.மருத்துவமனை தரப்பில் நடந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்தால், இறுதிச் சடங்கு தடைபட்டதுடன், தேவையற்ற அலைச்சலும், செலவுகளும் ஏற்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினமும் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்று வரும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகம் தூக்கத்தில் இருக்கின்றதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.