ஆறு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்..!! வியப்பில் மருத்துவர்கள்..!

27 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரே நேரத்தில் இரட்டையர்கள் பிறப்பது பெரும்பாலும் நிகழ்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் தாய் ஒருவர் ஒரு மணி நேரத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பிரசவத்திற்காக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் ஏப்ரல் 18ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19 ம் தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளில் 4 ஆண், 2 பெண் குழந்தைகள்.

ஒவ்வொரு குழந்தையும் 2 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவையே.அதேநேரம், 6 குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர் பர்சானா கூறுகையில்,தாயும், குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். வழக்கமான எடை அளவு எட்டும் வரை குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.4.5 மில்லியன் பெண்களில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற ஒரு பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற முடியும். இது ஒரு மருத்துவ அதிசயம் என்று மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.