பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை..!!குழந்தையின் சடலம் எங்கே..? நீதி கோரும் உறவினர்..!

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையின் ஊழியர்கள் பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தையின் சடலத்தை தமக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.மதுஷானி அந்த மருத்துவமனையில் சேவையாற்றும் மகப்பேற்று மருத்துவர் ஒருவரிடம் தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் மற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் முன்பு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள போதும், பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள சடலத்தை அடக்கம் செய்ததற்காக மாத்தறை மாநகர சபைக்கு 2500 ரூபாய் பணம் செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டு வருமாறு வைத்தியசாலை பணிக்குழாமினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி உரிய தொகையை மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.எனினும் குழந்தையின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்துள்ளமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறவினர்கள் நேற்று முன்தினம் (25) இரவு வரை வைத்தியசாலையில் காத்திருந்த போதிலும் வைத்தியசாலை பணிக்குழாமினர் எவரும் சடலம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் எவரும் அதுற்கு பதில் அளிக்கவில்லை.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *