வெளி நாட்டு வேலைவாய்ப்பு குறித்து கடும் உத்தரவு..!!

வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் பணம் சேகரிக்கும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும், வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி நிதி பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.அதேவேளை அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு புலனாய்வு குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.