காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி இன்று விடுதலை !

கடந்த வாரம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட‌ காணாமல் போனோர் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்து நகரசபை மண்டபத்தில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சங்கத்தின் தலைவியை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.ஜெனிற்றா,நாங்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கே அனுமதி கேட்டிருந்தோம். மாறாக எந்தவிதமான வன்முறைகளையும் நாம் மேற்கொள்ளவில்லை. அரச சொத்துக்களை சேதப்படுத்தவில்லை, வீதியினை மறிக்கவில்லை. ஆனால் காவல்துறையினர் எங்களை பெண்கள் என்றும் பார்க்காது அநாகரிகமான முறையிலேயே கைதுசெய்தனர்.கொலைக்குற்றங்களை செய்தவர்களை கூட இப்படி நடாத்தியிருக்கமாட்டார்கள். நீதியின் குரல்களை ஒடுக்கும் வன்முறைச் செயலாகவே இதைப் பார்க்கிறோமென கூறினார்.